கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் அமைந்துள்ள கே.எம்.சி காலனி பகுதியில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த இடத்திற்கு பட்டா கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து அந்த இடத்தை இடித்து அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க போவதாக வாய் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், வீடுகளை காலி செய்துவிட்டு மாற்று இடத்திற்கு செல்ல கூறியுள்ளனர்.
மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வரும் தங்களுக்கு, பலர் வாடகைக்கு வீடு தர மறுத்து தீண்டாமையை கடைபிடிப்பதாக புகார் தெரிவிக்கும் அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளனர்.
மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பு கொளந்தானூர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் தங்கி இருந்து அடுக்குமாடிகளை இடித்து அகற்றிய நிலையில், தற்போது வரை கட்டுமான பணி தொடங்காததால் அவர்கள் வெளியூரில் இருந்து வேலைக்கு வருவதாகவும், குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப சிரமத்தில் இருப்பதாகவும் தெரிவித்து, தங்களுக்கு மாற்று இடத்தில் தற்காலிகமாக குடியிருக்க வீடும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.