Skip to content

கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து கரூர் சுற்றுலா மாளிகையில் தாங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவலர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் என பல தரப்பினரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 9 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்று இரண்டு பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகளான ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை தரப்பில் இதுவரை கரூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் மட்டுமே ஆஜராகி வந்தனர். முதன் முறையாக டிஎஸ்பி செல்வராஜ் ஆஜராகி உள்ளார். டிஎஸ்பி வாகன ஓட்டுனர் ஏராளமான கோப்புகளையும் விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளார். கோப்புகளில் விஜய் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் வருகைப் பதிவு விபரங்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!