Skip to content
Home » மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 45). இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை  நடத்தி வருகிறார். இவரது நண்பரான புதுச்சேரியைச் சேர்ந்த சேகர் (வயது 42). தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். தற்போது சேகர் புதுவை மாநில பாஜகவில் மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார்.
சேகரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன் ரூ. 5 லட்சத்தை ஞானப்பிரகாசம் கடனாக பெற்றிருந்ததாகவும் பலமுறை திருப்பிக்கேட்டும் அந்த தொகையை திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தான் சேகர் நேற்று மாலை மணப்பாறைக்கு வெள்ளைநிற மாருதி ஸ்விப்ட் காரில் வந்து கடையில் இருந்த ஞானப் பிரகாசத்தின் மகன் எபினேசர் (வயது 22). என்பவரை கடத்திச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து மணப்பாறை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரு காரில் வாலிபரை கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான தனிப்படையினர் செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி புதுவையில் இருந்த சேகரை தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் வாலிபரையும் மீட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சேகரை மணப்பாறை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை வாங்கிய கடனுக்காக மகனை பாஜக பிரமுகர் கடத்திய சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!