தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த ஆதிகும்பேசுவரர் கோயிலுக்கு யானை மங்களத்தை காஞ்சி மகா பெரியவர் 1982 ஆம் ஆண்டு வழங்கினார். தற்போது 56 வயதாகும் இந்த யானை மங்களத்துக்கு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடன் இருப்பதற்காகவும் இயற்கை மூலிகைகள்,
உடற்பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் யானை மங்களம் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், தன்னைப் பராமரிக்கும்
யானைப் பாகன் அசோக்குடன் சேர்ந்து, திறன்பேசியைப் பார்ப்பது உள்ளிட்ட குறும்புகளிலும் ஈடுபட்டு
வருகிறது. இதைக் கோயிலுக்கு வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ரசிப்பது மட்டுமல்லாமல்,
திறன்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இக்காட்சிகள் சமூக
வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், கும்பகோணத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள்
யானை மங்களத்தையும் பார்த்துச் செல்கின்றனர்.
இதன் சுறுசுறுப்பைப் பாராட்டி யானை மங்களத்துக்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை மத்திய
அரசின் அங்கீகாரம் பெற்ற புது தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா
அவுர் ஜந்தா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், யானை மங்களம் பராமரிப்பாளரும்,
பாகனுமான அசோக்கிடம் லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
சுதன்பாலன், அஜீத்குமார் நினைவுப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர்.