நடிகர் ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை முதன்மை கதாபாத்திரங்களாக வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மனிதத்தை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் ரஜினி சிறப்பு தோற்றத்தில்
நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, தமிழகத்தில் சில திரையரங்குகளில் காலை 9 மணிக்கு திரை இடுகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 4 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது. திருச்சி மாரிஸ் திரையரங்கில் வெளியாகும் இந்த படத்தினை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தை கொண்டாடினர். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவத்துடனும், சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்ற வசனம் பொருத்திய கொடியை ரஜினி ரசிகர்கள் அறிமுகம் செய்தது அனைவரையும் உற்று நோக்க வைத்தது.