மணல் கடத்திய லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலையூர் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்ர் லாரி ஒன்றை நிறுத்தி சோதித்தபோது, அதில் சட்டவிரோதமாக 3 யூனிட் கிராவல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேபோல், முசிறி உட்கோட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முல்லிப்பாடி வாய்க்கால் கரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அபிராமி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 மூட்டை மணல் கடத்தி வந்த மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டது
கஞ்சா விற்ற மூதாட்டி கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுமதி (61) என்பவரை பிடித்து சோதித்தனர். அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்… 2 பேர் கைது
திருச்சி இனாம்குளத்தூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழகடை அம்மன்பேட்டை பகுதியில் சந்தேகப்படும்படி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், விமல் உள்ளிட்ட 306 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 2.48 லட்சம் ஆகும். இது தொடர்பாக பூலாங்குளப்பட்டியைச் சேர்ந்த புகழேந்தி (28) மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியரசு (29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர், 2 செல்போன்கள் மற்றும் ரூ. 9,680 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
