புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பெர்ரி ரோட்டில் வசித்தவர் மண்டங்கி காஞ்சனா (23). இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக வேலை செய்தார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் இருந்த தனது செல்லப் பிராணியான நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பிய மண்டங்கி காஞ்சனா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த தாய், உறவினர்கள் அவரை தேடி அலைந்தபோது மண்டங்கி காஞ்சனாவுடன் வந்த நாய், அங்குள்ள கோதாவரி ஆற்று பாலத்தின் மீது படுத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்களது நாயை அடையாளம் கண்ட மண்டங்கி காஞ்சனாவின் குடும்பத்தினர், நாய் அருகில் சென்று பார்த்தபோது காஞ்சனா காலில் அணிந்து வந்திருந்த செருப்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே காஞ்சனாவின் தாய், உறவினர்களை பார்த்த நாய், உடனே பாலத்தின் மீது நின்றவாறு கீழே ஓடும் ஆற்று நீரை பார்த்தபடி சுற்றிசுற்றி வந்தது. அதன்பிறகே மண்டங்கி காஞ்சனா, ஆற்றில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்களுக்கு எழுந்தது. இதையடுத்து உடனே ஏனாம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ நுக்கராஜூ தலைமையிலான போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் மண்டங்கி காஞ்சனாவின் அண்ணன் மண்டங்கி சுபாஷ் சந்திரபோஸிடம் புகாரை பெற்ற போலீசார் மிஸ்சிங் பிரிவில் வழக்குபதிந்து காஞ்சனாவை தேடும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஈடுபட்டனர். இதனிடையே காஞ்சாவின் உடல் கோதாவரி ஆற்றில் இறந்த நிலையில் மிதப்பது தெரியவரவே, உடனே தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அதை மீட்ட ஏனாம் போலீசார், பிரேத்பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.