Skip to content
Home » காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (28). பெயிண்டரான இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை மணலியைச் சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் தம்பதியினருக்கு ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளார். மேலும் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நந்தினி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் ராஜசேகர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தினந்தோறும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நந்தினி தனது கணவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல இன்று மதியம் ராஜசேகர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நந்தினி தனது கணவரிடம் அடிக்கடி நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார்.

அ்பபோது மது போதையில் இருந்த ராஜசேகர், நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். தொடர்ந்து தனது ஆறு வயது மகனை தூக்கிகொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்துள்ளார். நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நந்தினி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜசேகரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!