Skip to content
Home » காதலுக்கு ஏது எல்லை? தமிழக வாலிபரை காதலித்து மணந்த சீனப்பெண்

காதலுக்கு ஏது எல்லை? தமிழக வாலிபரை காதலித்து மணந்த சீனப்பெண்

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாலசந்தர். வணிக மேலாண்மை படித்த இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில்முனைவோராக  உள்ளார். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோவுக்கும் சமூக வலைதள செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் அடிக்கடி 2 பேரும் பேசி வந்தனர்.

நாளடைவில் இது அவர்களிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சந்தித்து பேசினர். அப்போது 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது பற்றி அவர்கள் 2 பேரும் தங்களின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டனர்.

அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த காதல் ஜோடியினர் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதுவும் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள யீஜியோ விரும்பினார்.

இதையடுத்து அவர்களின் திருமணம் நேற்று கடலூர் முதுநகரில்  நடந்தது. தமிழ் கலாசார படி மணமகன் பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், மணமகள் பட்டுசேலை, நகைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்து இருந்தனர். பிறகு வேத மந்திரங்கள் முழங்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தேசம் கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளதை பார்த்து, அவர்களது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தான் எல்லை பிரச்னை. ஆனால் காதலுக்கு ஏது எல்லை என்பதை இவர்கள் நிரூபித்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!