Skip to content
Home » மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் தினத்தில்  தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி  பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து இன்று   மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக  தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி  சொல்லும்  வகையில்  காளைகள், பசுக்களுக்கு விருந்து படைத்து, நன்றி கடன் செய்யும்  நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். பொங்கல் பொங்குவதால் பட்டி பெருகும் என்பது ஐதீகம். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாட்டு பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன்  கொண்டாடப்பட்டு வருகிறது.

காலையிலேேய  மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி,  அதற்கு மாலை அணிவித்து,  பொட்டு வைத்து அலங்கரித்தனர். பின்னர் மாடுகளுக்கு பிடித்தமான கீரை உள்ளிட்ட தீனிகள் கொடுக்கப்பட்டது.   பின்னர், மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டினர். கழுத்தில் தோல் வார் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசி,மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கல் கொண்டாடினர். பின்னர், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி  மாட்டுப்பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!