பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து: மூலப் பத்திரம் இல்லாவிட்டாலும் ஆவணப் பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் சொத்து பரிமாற்றம் மற்றும் ஆவணப் பதிவுகளின் போது நிலவி வந்த மிகப்பெரிய நடைமுறைச் சிக்கலுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. சொத்தின் மூலப் பத்திரம் (Parent Document) இல்லாத பட்சத்தில் புதிய ஆவணப் பதிவுகளைச் செய்ய இயலாது என்று முட்டுக்கட்டை போட்டு வந்த சட்டப்பிரிவு 34C-ஐ முழுமையாக ரத்து செய்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பும் வில்லங்கச் சான்றிதழ் குறித்த புதிய நெறிமுறைகளும்
இந்த வழக்குகளை விரிவாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அமர்வு இன்று தங்களது முக்கியத் தீர்ப்பை வாசித்தது. அதன்படி, பொதுமக்கள் மற்றும் சொத்து உரிமையாளர்களின் நியாயமான தேவைகளைப் பாதிக்கும் வகையில் உள்ள 34C என்ற பத்திரப் பதிவுச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் மூலப் பத்திரம் இல்லாவிட்டாலும் சட்டப்படியான ஆவணப் பதிவுகளைச் சார்பதிவாளர்கள் மறுக்கக் கூடாது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், சொத்து விவரங்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில், வில்லங்கச் சான்றிதழ் (EC) கோரி விண்ணப்பிப்போருக்கு சர்வே எண் மற்றும் கதவு எண் ஆகிய முக்கிய விபரங்களுடன் அதற்கான சான்றிதழைத் தாமதமின்றி முழுமையாக வழங்க வேண்டும் எனவும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
