மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த பெரியசெம்மேட்டுப்பட்டியில் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை அதே பகுதியை சேர்ந்த தேவபிச்சை(வயது 72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தங்கி இருந்தனர். இந்தநிலையில் அங்கு இருந்த சிறுமிகளுக்கு தேவபிச்சை பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். தொடர்ந்து அவரது நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த 5 சிறுமிகள், 2018-ம் ஆண்டில் இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து, தேவபிச்சையை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார். விசாரணை முடிவில், தேவபிச்சை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற 4 சிறுமிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை தேசிய வங்கி ஒன்றில் சிறுமிகள் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.