Skip to content
Home » மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

  • by Senthil

 மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி வருகிறது. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. 28க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாகூட்டணியை அமைத்துள்ளன. இதில் நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி முடிவாகி தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டன.

இதுபோல மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், குஜராத், இமாச்சலப்பிரதேசம், டில்லி, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. தமிழகத்தில் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் மேற்கு வங்கத்தில் 40 தொகுதிகளிலும் தனித்து நிற்க போவதாக அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

அதுபோல அவரது கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரும் அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் இந்திய கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய மம்தா பானர்ஜி; இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும், அதை அறிந்துகொள்ள முகநூல் பக்கத்தை பின்தொடருமாறும் தெரிவித்தார். மம்தாவின் இந்த அறிவிப்பு அந்த மாநில மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!