தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவின் போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (20) என்ற வாலிபர் மதுபோதையில் அங்கிருந்த மகாராஜா(18) என்பவரிடம் வீண் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட மகாராஜாவின் உறவினர் சதீஸ்குமார்(29), விக்கியைக் கண்டித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, தனது நண்பர்கள் 3 பேரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, அவர்கள் அரிவாளால் சதீஸ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த சதீஸ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவில் திருவிழாவில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
