மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டன. அதனை விவசாயிகள் வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்யும் மழையால் விவசாயிகள் அறுவடை பணியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையை அடுத்த மணக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் இந்த மழையால் வயலில் சாய்ந்து முளைக்கும் தருவாயில் உள்ளது. ஆனால் தொடரும் மழையின் காரணமாக இப்பயிரை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள்
உள்ளனர். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் அவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.