திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இயங்கி வந்த மீனாட்சி பெட்ரோல் பங்க் 60 வருடங்களுக்கும் மேலாக அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவது குறித்தும், அந்த பெட்ரோல் பங்க், விதிகளை மீறி வாடகை பணத்தை கூட அரசுக்கு செலுத்த வில்லை என்பது குறித்தும் கடந்த 4 மாதகாலமாக இ- தமிழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இந்த செய்திக்காக மிரட்டலும், வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என பாச அழைப்புகளும் மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன.
ஆனால் இ -தழிழ் எதையும் கண்டுக்கொள்ளாமல் முறைகேடாக செயல்படும் பெட்ரோல் பங்க்கை அகற்றியே ஆக வேண்டும் என்பதில் குறியாக இருந்து தொடர்ந்து செய்தி வெளியிட்ட தோடு அந்த செய்திகளை மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, உளவுத்துறை மட்டுமல்லாது தலைமைச் செயலக அதிகாரிகள் வரை அனைத்து தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இ- தமிழ் நடத்திய இந்த துணிச்சலான போராட்டத்துக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.
நேற்று மதியம் மாவட்டக்கலெக்டர் பிரதீப்குமார் மீனாட்சி பெட்ரோல் பங்க் டிச 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்க கூடாது எனக்கூறி, அதனை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட மீனாட்சி பெட்ரோல் பங்க் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக பங்க் நிர்வாகம் தானாக முன்வந்து மாலை 4.30 மணிக்கு பெட்ரோல் பங்க்கை மூடி விட்டது. இந்த விவகாரத்தில் இ -தமிழ் பங்களிப்பு ஒரு சில சதவீதம் தான்.
அதேசமயம் இந்த விவகாரத்தில் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டடாலும் அதனை கண்டுகொள்ளாமல் நேர்மையாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் , திருச்சி நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றிய பல அதிகாரிகளுக்கும் இந்த விவகாரம் தெரிந்தும் யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில் அந்த இடம் எங்கள் இடம் என கூறி கடைசி வரை பிடிவாதமாக இருந்து அதிலும் வெற்றி பெற்ற திருச்சி நெடுஞ்சாலைத்துறையின் உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, உதவி பொறியாளர் அசோக்குமார் ஆகியோருக்கும் இ தமிழ் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.