Skip to content

காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.  கேரளாவில் பெய்யும் மழை  காரணமாக  கர்நாடகத்தில் உள்ள  கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி நிரம்பி உள்ளது.

இதுபோல  குடகு பகுதியில் பெய்யும்  மழை காரணமாக  கே.ஆர்.எஸ் அணையும் நிரம்பி  விட்டது. அணைகளில் பாதுகாப்பு கருதி  அங்கிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 112.75 அடி. அணையில் 82.348 டிஎம்சி தண்ணீர் உள்ளது.  அணைக்கு  வினாடிக்கு  18,290 கனஅடி தண்ணீர்  வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 20,003கனஅடி தண்ணீர்   டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.

அணை நிரம்ப இன்னும் 7.25 அடி தண்ணீர் தான் தேவை. அதாவது 10.1 டிஎம்சி தண்ணீர்  வந்தால்  அணை தனது முழு கொள்ளளவை  எட்டி விடும். அதன் பின்னர்  உபரி நீர் திறக்கப்படும்.

இந்த நிலையில் இன்று மதியம் கர்நாடகத்தில் கபினியில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரம் கனஅடியும், கே. ஆர்.எஸ் . அணையில் இருந்து  வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும் திறக்கப்படுகிறது. மொத்தம்  76 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தண்ணீர்  நாளை இரவு  மேட்டூர் அணை வந்து சேரும்.

எனவே அணை  விரைவில் நிரம்பி விடும் என்பதால், மேட்டு்ர் அணையில் இருந்து  நீர் திறப்பையும்  20 ஆயிரம் கனஅடியில் இருந்து 22, 500 கனஅடியாக அதிகரித்து உள்ளனர். இது நாளை மேலும் அதிகரிக்கப்படும். அதாவது 30 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்படலாம். எனவே தமிழ்நாட்டிலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

76 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்குள் வரும்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் 50 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படலாம்.

 

error: Content is protected !!