அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.
அப்போது அவர், நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கப்பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்பட்ட விஷயத்தை, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். அதன்படி இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.