அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி, அமைச்சரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தரப்பு வாதங்களையும் கேட்ட செசன்ஸ் நீதிபதி அல்லி 20ம் தேதிக்கு (இன்று)தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கு 77 வது வழக்காக பட்டியலிடப்பட்டதால் இன்று மாலை 3.45 மணி அளவில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் அமைச்சருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
இது குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் கூறும்போது, உச்சநீதிமன்ற நீதிபதியே, ஜாமீன் விண்ணப்பித்தால் ஜாமீன் வழங்கும்படி கூறி உள்ளது. ஜாமீன் மனுக்களை விசாரிக்கவா உச்சநீதிமன்றம் உள்ளது என கேட்டு உள்ளார். ஆனால் செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்துள்ளது. அமைச்சருக்கு பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டது பிற்போக்குத்தனமானது. இனி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்வோம்’ என்றார்.