Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும், அவரை காவலில். எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.  நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிடுகையில், ‘சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் தனித்தன்மை வாய்ந்தது. எனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் காவல் அதிகாரிகள் என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் இந்த வாதங்களை நிராகரித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்ற முடிவுக்கு கோர்ட்டு் வந்துள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்றால் எந்த அதிகாரத்தை கொண்டு போலீஸ் காவலை அவர்கள் கோர முடியும்? அந்நியச்செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அதிகாரம் இருந்தாலும் அவரை காவலில் வைத்து விசாரிக்க கோர முடியுமா?. இது சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும். காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரம் அமலாக்கத் துறைக்கு இல்லை. அமலாக்கத் துறை காவல்துறை அதிகாரிகள் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த பிறகு மீண்டும் அவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான் என அமலாக்கத் துறை தெரிவித்து வருகிறது. அமலாக்கத்துறை சம்மன் வழங்கப்பட்ட நபர், தான் குற்றவாளியா? சாட்சியா? என்பது தெரியாது. சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்வதை போல, அமலாக்கத் துறை கைது செய்ய முடியாது ஆதாரங்களை திரட்டிய பிறகுதான் கைது செய்ய முடியும்.

புகார்தாரர் அளித்த விவரங்களையே, ஆதாரங்களாக முன்வைத்து விட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேறு என்ன உள்ளது?, தேவைப்பட்டால் சிறைக்கு சென்று குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிக்கலாமே தவிர, அமலாக்கத் துறை காவல் கோருவது முறையாகாது. சட்டத்தில் இல்லாததை அமலாக்கத் துறையினர் கோர முடியாது. வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கவும் முடியாது’ என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு  வழக்கை தள்ளி வைத்தது.

அதன்படி இன்று பிற்பகல் 2ம் நாள்  விசாரணை தொடங்கியது.   அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.  அப்போது அவர் கூறியதாவது:

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சிறையில் தான் இருக்கிறார். அங்கு சென்று கூட அமலாக்கத்துறை அவரிடம் விசாரிக்கலாம். ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது  தாராளமாக விசாரிக்கலாம்.  அதற்கு எந்த தடையும் இல்லை.

ஆனால் போலீஸ் போல காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.  அதுவும்  கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆனால் அது நீதிமன்ற காவலாகத்தான் இருக்க முடியும்.

நீதிபதிகள்:சட்டப்பிரிவு 19ன் படி அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரத்தை மறுக்க முடியாது. விசாரணை செய்யவும், கைது செய்யவும் பிஎம்எல்ஏ  விதிகள் வழிவகை செய்துள்ளது.

கபில்சிபல்:   அமைச்சர் செந்தில் பாலாஜி  இந்த வழக்கில் வெற்றிபெறலாம், அல்லது தோற்கலாம். ஆனால் அமைச்சர் கைது விவகாரத்தில் சட்டவிதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார்மேத்தா:   அரசியலின் அடிப்படையில் வாதிட வேண்டாம். தரவுகளின் அடிப்படையில் வாதிடுங்கள்.  ஒரு அதிகாரி தவறாக ஒருவரை  கைது செய்தால், அந்த அதிகாரிக்கு  2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

கபில்சிபல்:  அப்படியானால் இதுவரை எத்தனை அதிகாரிகள் சிறைத்தண்டனை பெற்று உள்ளனர்.

இவ்வாறு இருதரப்பினரும் காரசாரமாக விவாதித்தனர்.  அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 1ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!