அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்ப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. அமலாக்கத்துறையால் ஜூன் 14ல் கைது செய்யபட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு வலி இருப்பதாக செந்தில் பாலாஜி பதிலளித்தார். இதனையடுத்து ஜூலை 12-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.