ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. 25ம் தேதி மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே அனைத்து கட்சி தலைவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியை முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தற்போது திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீதி வீதியாக ஓட்டு சேகரித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவர் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒற்றை செங்கலுடன் பிரசாரம் செய்தது போல இந்த இடைத்தேர்தலிலும் அவர் ஒற்றை செங்கலுடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
முந்தைய ஆட்சியாளர்கள் அரசின் கஜானாவை 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் வைத்திருத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின்கொரனா நிவாரண தொகை , பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் இப்படி பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .
பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை 1000 ரூபாய் இன்னும், அதிகபட்சம் 5 மாதத்திற்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கைதடடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.