Skip to content
Home » பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரின் மகன்கள்  நரேஷ்குமார் (33), விக்னேஷ்குமார் (30). ஆட்டோ ஓட்டிவரும்  இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் தங்களது  குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்தநிலையில், இருவரும் தங்களது குடும்பத்துக்கு சொந்தமாக மாதவரம் பகுதியில் உள்ள 600 சதுர அடி நிலத்தை விற்பனை செய்ய முடிவெடுத்தனர்.

அந்த நிலத்தை ஒருவரிடம் 18 லட்சத்திற்கு விலை பேசி முடித்து ஒரு லட்ச ரூபாய் முன் பணமும் பெற்றுள்ளனர். நேற்று காலை நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நரேஷ்குமாரும் அவரது தம்பி விக்னேஷ்குமாரும் மாதவரம் நாகாத்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில், நிலத்தை விற்பதால் கிடைக்கும் பணத்தை எப்படி பங்கிடுவது என்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், தனது  தம்பி விக்னேஷ்குமாரை பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார்.  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விழுந்த விக்னேஷ் குமாரை இரும்புக் கம்பியால் தலை மற்றும் கழுத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில்  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விக்னேஷ்குமாரை  108 ஆம்புலன்ஸ் வரவைத்து அதன் மூலமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நரேஷ்குமார். அங்கு மருத்துவர்கள் காயம் குறித்து கேட்டபோது, தம்பி தவறி கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விக்னேஷ் குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நரேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தம்பியை நரேஷ்குமார் கொலை செய்தது உறுதியானதால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பணத்துக்காக தம்பியை அண்ணனே கோடூரமாக கொலை செய்த சம்பவம் மாதவரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!