தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் க.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்தள், மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விரு நிகழ்ச்சிக்கும் பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது… தஞ்சாவூர் மாநாகராட்சி பகுதியில் நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. அங்கு கர்ப்ப கால பரிசோதனைகள் மேற்கொண்டு வரும் 1,212 கர்ப்பிணிகளில் 640 பேருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தினமும், தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திலிருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும்
ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும். குழந்தைகள் பிறந்த பின்னரும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் பிரசவகாலத்தின் போது தாய் சேய் உயிரிழப்புகள் இருக்ககூடாது என்ற அடிப்படையில், தமிழகத்தில் முதன்முறையாக இதுபோன்ற கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
17 மாநகராட்சி பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை இடித்துவிட்டு, ஒரே மாதிரியாக புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இன்னும் 6 மாதங்களில் தஞ்சாவூரில் விமான சேவை தொடங்கப்படும்.
மாநகராட்சி மேயராக, உறுப்பினர்களாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து, 2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். மாநகர வளர்ச்சியை நோக்கி எங்கள் பணி இருக்கும். “மக்களோடு மேயர்” என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு மக்களை சந்திக்க இருக்கிறோம் என்றார்.