Skip to content
Home » பந்து வீச்சாளர்களுக்கு டோனி எச்சரிக்கை….இனியும் இப்படி நடந்தால் ……..

பந்து வீச்சாளர்களுக்கு டோனி எச்சரிக்கை….இனியும் இப்படி நடந்தால் ……..

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. இதில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் நோபால், வைடுகளை அதிகமாக வீசியதால் கேப்டன் டோனி கடும் கோபம் அடைந்தார். 13 வைடுகளும் 3 நோபாலும் வீசப்பட்டன. குஜராத்துக்கு எதிரான ஆட்டத்திலும் பந்து வீச்சாளர்கள் 4 வைடு, 2 நோபால்களை வீசினார்கள்.

இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பந்து வீச்சாளர்கள் குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:- வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய செயல்பாட்டால் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆடுகள தன்மைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பந்து வீச வேண்டும். பீல்டர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்களோ பந்து அங்கே செல்லும் வகையில் திட்டத்தை மாற்றி அமைத்து பந்து வீச வேண்டும். எதிர் அணி பவுலர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனியுங்கள். அவர்கள் என்ன யுக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து நீங்கள் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இந்த ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக நோபால், வைடுகளை வீசினோம். இது சரியானதாக இல்லை. நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது எச்சரிக்கை. இல்லையென்றால் அதன் பிறகு நான் வெளியேறிவிடுவேன். சேப்பாக்கம் ஆடுகளம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இரண்டு அணிகளும் ரன்களை குவித்தன. எங்களுக்கு முதல் போட்டியே சிறப்பாக அமைந்துவிட்டது. 2 அணிகளுமே 200 ரன்னுக்கு மேல் குவித்ததால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இங்கு ரன்களை குவிக்க முடிந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இதே போன்று ஆடுகளம் தொடர்ந்து அமைக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!