Skip to content
Home » கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு… ஆனாலும் உற்பத்தியாளர்கள் கவலை!

கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு… ஆனாலும் உற்பத்தியாளர்கள் கவலை!

இந்தியாவிலேயே குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தருவாய்குளம், வேப்பலோடை, ஆறுமுகநேரி, முல்லைக்காடு, பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கமாக ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் துவங்கியது. உப்பு உற்பத்தி துவங்கிய போதும், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உப்பு உற்பத்தி அத்கிகரித்து வருகிறது.
உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி தொழிலாளர்கள்
தரமான உப்பு உற்பத்தி செய்ய சில நாட்கள் ஆகும் என்பதால் புதிதாக உற்பத்தி செய்யப்படும் உப்பின் விலை ஒரு டன் 1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. ஆனால், கடந்த ஆண்டு உற்பத்தி செய்து சேமித்து வைக்கப்பட்ட உப்பு ஒரு டன் 4,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக துவங்கியதால், நான்கு மாதங்கள் மட்டுமே உப்பு உற்பத்தி இருக்கும் என உற்பத்தி யாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உற்பத்தி குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு விலை உயர்ந்து வருவதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், குஜராத், ஆந்திராவின் நெல்லூர், தமிழகத்தின் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு உப்பு வாங்கி வருகின்றனர். இதனால் போதுமான லாபம் கிடைப்பதில்லை என தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!