மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி கண்காணிப்பு கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து அந்த சிறுத்தை 22 கி.மீ. இடம்பெயர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லையான குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் மற்றும் கருப்பூர் பகுதிகளில் நடமாடியதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
10 நாட்கள் ஆகியும் சிறுத்தை பிடிபடவில்லை. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் இருந்த பரபரப்பு இப்போது பக்கத்து மாவட்டங்களான தஞ்சை, திருவாரூருக்கும் பரவியுள்ளது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக சிறுத்தை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆனாலும் தஞ்சை திருவாரூர் மாவட்ட எல்லைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை நகர் அருகே நல்லத்துக்குடி ஊராட்சி பழைய பயன்பாடற்ற ரயில்வே தடத்தில் உள்ள தார் பிளாண்டில் பணியாற்றம் ஹரிஹரன் மற்றம் சிலர் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்ததாக தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக காட்டுத்தீ போல் பொதுமக்களிடம் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் எனக் கூறப்படும் சந்தேகத்துக்கு இடமான கால் தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தெர்மல் டிரோன் கேமரா கொண்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் சோதனை மேற்கொள்’ளப்பட்டது. இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். இரவில் செய்த ஆய்வில் எந்த தடயமும் சிக்கவில்லை என்றும் இன்று காலைநேரத்தில் சோதனை செய்த பிறகு தான் அது சிறுத்தையின் கால் தடமா என்பைத உறுதி செய்ய முடியும் என அவர் கூறினார்.
சிறுத்தை தஞ்சை மாவட்ட எல்லைக்கு நகர்ந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில் மீண்டும் அது மயிலாடுதுறை டவுன் பகுதியிலேயே நடமாடி உள்ளதால் மயிலாடுதுறை நகரில் பரபரப்பு நிலவுகிறது.