கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடு என்ற கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார்(42) கேள்வி கேட்டுள்ளார். மேலும், ஆலய நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இவர், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், மைலோடு ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்துக்கு நேற்று முன்தினம் மதியம் சேவியர்குமார் சென்ற நிலையில், மாலையில் ரத்தக் காயங்களுடன் அங்கு இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் பரவியதால், நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சேவியர் குமார் கொலை தொடர்பாக மைலோடைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், முரசங்கோடு பாதிரியார் பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீதுகொலை உட்பட 9 பிரிவுகளில் இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில், சேவியர் குமாரைக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். திமுக செயலாளர் ரமேஷ்பாபு கைது செய்யப்பட்டார்.