வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது
.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அடுத்த தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அங்கிகரிக்கப்பட்ட தேர்தல் கட்சிகளுக்கு அந்த கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கிகரிக்கப்படாத மாநில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு தங்களது கட்சிக்கு பின்னடைவாக அமையும் என நாம் தமிழர் கட்சியினர் கருதுகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்தே நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? அல்லது வேறு சின்னம் ஒதுக்கப்படுமா என்பது தெரியவரும். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காவிட்டால் அந்த கட்சிக்கு அது பின்னடைவாக அமைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.