புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், குழந்தைகளுக்கு கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கள்) பிற்பகல் நடக்கிறது. இதையொட்டி திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் அம்மனை வழிபட்டு கோயிலில் திரண்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்பி வந்திதாபாண்டே மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற 13-ம் தேதி வேலை நாளாக இருக்கும். ஏற்கனவே 13-ம் தேதி வேலை நாளாக உள்ள அலுவலகங்களுக்கு 14-ம் தேதி வேலை நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.