தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டது. கடந்த 6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில், பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3.99 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோரை அழைத்து தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் தொடர்பு கொண்டு பணத்தை கொடுத்து விடுமாறு கூறியதால் பணத்தை அனுப்பியதாக தெரிவித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மணிகண்டனுக்கும் தாம்பரம் போலீஸார் சம்மன் வழங்கினர்.
இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமென தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை அளித்திருந்தார். இதனை ஏற்று சிபிசிஐடி, விசாரணைக்கு கடந்த 26ம் தேதி உத்திரவிடப்பட்டது. ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பெருமாள் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கும் சிபிசிஐடி போலீஸார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.