நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருக்குவளை,பட்டுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 3 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியை சேர்ந்த 333 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்லூரிகளில் தமிழ் வழி கல்வியை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தியவர் கருணாநிதி என புகழாரம் சூட்டிய அவர், பட்டம் பெற்ற மாணவர்கள் சமூக சிந்தனையுடனும், சீர்திருத்தத்துடனும் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் தற்போது நீட் நுழைவு தேர்வு எழுத மாணவர்களாகிய உங்களுக்கு விருப்பம் உள்ளதா? என பட்டம் பெற்ற மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்துவதாகவும், அதில் எந்த தவறும் இல்லையும் என்றார்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக ஏழை மாணவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் கோச்சிங் சென்டருக்கு செல்வதாகவும் இதையெல்லாம் தடுக்கவே நீட் தேர்வு வேண்டாம் என தமிழக அரசு அதனை ஏற்க மறுத்து வருவதாக கூறினார். மேலும் வருங்காலங்களில் மூன்றாம் வகுப்பு முதல் BA,BSc என அனைத்து ,
படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வருவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும், அதனை கொண்டு வருவது சரியா என மாணவர்களிடம் வினா? எழுப்பியதுடன் உங்களது கருத்து என்ன என்றும் இது அரசியல் கேள்வி அல்ல என்றும் பேசினார்.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக மாணவர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்ட அமைச்சர் பொன்முடி, நீட் தேர்வு போல் தற்போது இருமொழி கொள்கைக்கும் ஆபத்து எழுந்திருக்கிறது என்றும் ஆங்கிலம் பயின்றாலும் மாணவர்கள் வீட்டுக்குச் சென்று தாய் தந்தையரிடம் தமிழில் தான் பேசுவார்கள் அது நடைமுறை வார்த்தையாக இருக்கும் என சென்னை ஸ்லாங்கில் நடிகர் எம் ஆர் ராதா போல் காமெடியாக பேசி, மாணவர்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.