நெல்லையில் குடியிருப்புகளை மழை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. பொதுமக்கள் மீட்கப்பட்டு 245 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த 30 மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
குறிப்பாக கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மிக கனமழை நெல்லையில் கொட்டி தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 60 சென்டிமீட்டரை தாண்டி மழை பதிவாகி வருகிறது. மேலும் திருநெல்வேலியில் இன்றும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருவதால் நெல்லை மாநகரம் மற்றும்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் ஆகியோர் அப்பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். வௌ்ள மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பின்னர் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் , நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நெல்லையில் நிவாரண முகாம்களில் 3500 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரைகள் உடைப்பு தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதில் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருகிறோம். 3 சிறப்பு குழுக்களில் 5000 பேர் களப்பிணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகிறது என்று இவ்வாறு தெரிவித்தார். இதனைதொடர்ந்து அமைச்சர் உதயநிதி கூறியதாவது.. எதிர்பாராத வகையில் மழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களை காப்பதே அரசின் நோக்கம் . சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு 2-3 நாட்களில் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.