Skip to content
Home » புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கல்வி, வேலைவாய்ப்பினை அனைவருக்கும் அளிக்கும் வகையிலும், மாணவர்கள், வேலைதேடுவோர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் நிதி ஆதாரங்களின் கீழ் ரூ.193.56 கோடி மதிப்பீட்டில் 100 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து போட்டித்தேர்வுகளும், மாணவர்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது 71 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்றையதினம் திறந்து வைத்தார்.

அதன்படி, அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்றைய தினம் திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

மேலும், இந்த அறிவுசார் மையத்தில் ஸ்மார்ட்போன் வசதியுடன் கூடிய பயிற்சியறை, இணையதள வசதியுடன் கூடிய கணினிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பொதுவான புத்தகங்களும், வேலைவாய்ப்பு மற்றும்

திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படவுள்ளது. எனவே, மாணவர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் உரிய முறையில் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் நகர்மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் (அரியலூர்) ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!