கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2.6 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் இன்று பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். அதன்படி தமிழக முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ராஜேந்திரம் ஊராட்சியில் தண்ணீர் பள்ளியில் 76.95 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கும், வைப்புத்தூரில்
இருந்து தெற்கு மயிலாடி வரை ரூபாய் 26.95 லட்சம் மதிப்பில் சாலைகளை பலப்படுத்துவதற்கும், ஈச்சம்பட்டி நான்கு ரோட்டில் இருந்து கல்லடை வரை ரூபாய் 1.54 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கும் எம்எல்ஏ பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கோட்டைமேடு அரசு துவக்கப்பள்ளி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினையும் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.