Skip to content
Home » தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது. மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற  மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும்  கலெக்டர் அலுவலகங்கள்  தேர்தல் அலுவலகங்களாக செயல்படும். கலெக்டர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள். இது தவி்ர அந்த தொகுதிக்கு உட்பட்ட ஒரு ஆர்டிஓ அல்லது  சப் கலெக்டர் துணைத்தேர்தல் அதிகாரியாக இருப்பார்கள். கலெக்டர் அல்லது துணை கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி கமிஷனர் தான் தேர்தல் அதிகாரி. தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தளம் மாநகராட்சிலாம்.. வேட்புமனு தாக்கல் செய்யும்போது  அந்த அறைக்குள் செல்ல வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும்பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.95 லட்சம் செலவு செய்யலாம்.  வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்குமுன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்க கூடாது.இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறுபாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல்செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும்பி படிவம்  சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். நாளை காலை வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் இன்றே அதற்கான பணிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!