உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறுமிகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்தப் புண்ணியத் தலத்தில், சித்திரைப் பெருவிழா, நவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பெரிய கோயிலின் பிரகாரத்தில் விமானகோபுரத்தின் பின்புறம், மூன்று சிறுமிகள் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படத்தின் ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
பெரிய கோயில் வளாகத்தில் நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. எனினும், கோயில் நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மீண்டும் கோயில் வளாகத்தில் நடனமாடிய வீடியோ வெளியிடப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதனை உன்னிப்பாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் வலியுறுத்துகின்றனர்.
