நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் தூங்கி கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ராஜேஷ் (19), சுகிராம் (28), யஸ்வந்த் (18), கோகுல் (23) ஆகிய 4 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் 4 வடமாநில தொழிலாளர்களில் ஒடிசாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.