கோவை: கோவை ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் பாலக்காடு சாலை வாளையார் அருகில் உள்ள ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளும் விசேஷ உடைகளை அணிந்து வந்து ஆடிபாடி மகிழ்ந்தனர். செண்டை மேளம், பேண்ட்வாத்தியங்கள், ராட்சத குரங்கு மற்றும் ரோபோட் மனிதர்கள் ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன. கல்லூரிக்கு முன்பு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் கல்லூரிக்கு வருகை புரிந்தனர்.
அதுமட்டுமின்றி ஓணம் பண்டிகையை முன்னிட்டு யானையை மையமாக கொண்டு பெரிய அளவில் அத்த பூக்கோலமும் போடப்பட்டிருந்தது. இதில் மகாபலி வேடமிட்ட மாணவர் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சொகுசு காரில் வலம் வந்தார். இறுதியாக சில மாணவர்கள் கார்களின் சைலன்சர்களை Modify செய்து ஒலி எழுப்பினர்.
