Skip to content
Home » பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பயணம்

பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பயணம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.   இந்த நிலையில்  இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது போல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  பாஜகவை வீழ்த்துவது தங்கள் ஒரு அம்ச திட்டம் என்ற அடிப்படையில் இணைந்து உள்ளனர்.  இவர்கள் கடந்த மாதம்  23ம் தேதி பாட்னாவில் முதல் கூட்டத்தை வெற்றிகரமாக கூட்டினர். இந்த கூட்டத்தை பார்த்த பாஜகவுக்கு கிலி பிடித்து விட்டது.

இந்த நிலையில் இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம்  தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் இந்த கூட்டம் பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில்நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய மாநாட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சிகர சமத்துவ கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி), மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன. 24 கட்சி தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன்,  கொங்கு கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோரும் தமிழகத்தில் இருந்து பங்கேற்கிறார்கள். இதற்காக இன்று அவர்கள் பெங்களூரு செல்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!