சென்னை அமைந்தகரையில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் பாஜக அமைப்பு பொதுச்செலாளர் கேசவ விநாயகம் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் கேசவ விநாயகம் பேசும்போது, தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன் பாஜக பல முறை தனித்து போட்டியிட்டுள்ளது. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்மாவட்ட தலைவர்களை டில்லி தலைமை கண்காணித்து கொண்டிருக்கிறது என்றார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரம் கழித்து மாநில தலைவர் அண்ணாமலை மாஸ்க் அணிந்தபடி கூட்டத்துக்கு வந்தார். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
அடுத்த 7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும்.
பாஜக கூட்டணியில் இருந்து செல்லுபவர்கள் செல்லடும் அது அவர்கள் விருப்பம், அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து டில்லி தலைமை தான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன். என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு நாளில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டம் முடிந்து வந்த அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: வரும் 2024 மக்களவை தேர்தல் என்பது திமுகவுக்கும், பாஜகவுக்குமான போட்டி, இந்த இரு கட்சிகளுக்கான யுத்தம். மத்தியில் 10 வருடம் பாஜக
ஆளுங்கட்சி. திமுக இங்கு ஆளுங்கட்சியாக இருக்கிறது. மோடி பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். இரு கட்சிகளும் தங்கள் பிராக்ரஸ் கார்டுகளை மக்களிடம் கொடுப்போம். அதைப்பார்த்து மக்கள் வாக்களிக்கட்டும்.இங்கு நாங்கள் திமுகவை எதிர்த்து தான் போட்டியிட உள்ளோம். யாரிடம் சண்டை போடுவது என நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து தேசிய தலைவர் நட்டா தான் முடிவு செய்வார். கூட்டணியில் அதிமுக இல்லை என்று வருத்தப்படவும் இல்லை, சந்தோஷப்படவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.