திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவனின் கையை அறிவாளால் வெட்டிவிட்டு பிரவீன் தப்ப முயன்றார். அப்போது காவல் ஆய்வாளர் ராஜேஷ் பிரவீனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். அரிவாளால் வெட்டப்பட்ட எஸ்எஸ்ஐ இளங்கோவன் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடி பிரவீன் மீது ஏற்கனவே திருவாரூர் காவல் ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்டவை உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (45). வக்கீலான இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இவர் கடந்த 22-ந்தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்றபோது மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் தட்டப்பாறை அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றவாளியை பிடிக்க முயற்சித்தனர். அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு ஜெயப்பிரகாஷ் தப்ப ஓட முயற்சி செய்தார். சுதாரித்துக்கொண்ட போலீசார் குற்றவாளி ஜெயபிரகாஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயபிரகாஷ் காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.