சென்னை: ஆம்ஸ்டிராங் படுகொலை வழக்கில் சிக்க வைப்பதாக கூறி ரூ.40 லட்சம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கம் மற்றும் பங்குச்சந்தை வியாபாரி அகில் குமார் உக்கம் ராஜ் என்பவரை மிரட்டி ரூ.40 லட்சம் வரை பறித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் புகாரி. இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை என்கவுன்ட்டர் செய்தவர். இவர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சௌகார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் குமார் புகார் அளித்துள்ளார்.
புகாரில் தன்னிடம் புகாரி என்ற காவல் ஆய்வாளர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க விடுத்து விடுவேன் என மிரட்டி தன்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 40 லட்சம் வரை வாங்கி உள்ளார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று காவல் ஆய்வாளர் புகாரி, பரங்கிமலையில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு காவல் ஆய்வாளரிடம் சென்னை கூடுதல் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல் ஆய்வாளர் புகாரி, அனில் குமாரிடம் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் காவல் ஆய்வாளரான புகாரி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி பலமணி நேர விசாரணைக்கு பின் அவரை பூக்கடை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக புகாரி பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
காவல் ஆய்வாளர் முகம்மது புஹாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
