ஒரு சில பொருட்கள் இல்லாமல் சமையல் செய்ய முடியாது. மிளகாய், உப்பு தவிர்த்து தக்காளி, வெங்காயம், பூண்டு இவை மூன்று சமையலின் அத்தியாவசிய பொருட்கள் எனலாம். அதனால், தான் மற்ற காய்களின் விலை அதிகரிக்கும் போது கவலைப்படாத மக்கள் இவற்றின் விலை உயர்ந்தால், கடும் அதிர்ச்சியடைகின்றனர்.
வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை வெங்காயமும், தக்காளியும் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியைத் தரத் தவறுவதில்லை. இந்த ஆண்டு பூண்டும் தன் பங்கிற்கு அதிர்ச்சியளித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நீலகிரி, கொடைக்கானல், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பூண்டு
உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. இவைபோக வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும் வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தைக்குப் பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் ஜனவரி மாதத்தில் பூண்டின் விலை கிலோவுக்கு ரூ.400 வரை அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, நடப்பாண்டில் விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் மற்றும் வரத்துக் குறைவு எதிரொலியாகப் பூண்டின் விலை உயர்ந்துள்ளது. 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு விலை ஏற்றம் இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், மலைப்பூண்டின் விலை ரூ.420 முதல் ரூ.450 வரை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.