நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா கடந்த 5,ம் தேதி சிதம்பரத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று முதல் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். இதனிடையே சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அடைக்கப்பட்ட 33,000 ரேஷன் கடைகள் பிற்பகலுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.