சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தம் மாவட்டம். இம் மாவட்டத்தில் சாமரி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்திரா. 22 வயதான இந்த இளைஞருக்கு கடந்த ஒன்னாம் தேதி அன்று தான் திருமணம் முடிந்தது. திருமணத்தின் போது மணமக்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் தரப்பட்டிருக்கின்றன. திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் தங்களுக்கு வந்த கல்யாணப் பரிசுகளை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்திருக்கிறார்கள். அதில் ஹோம் தியேட்டர் எனப்படும் டிவியுடன் பொருத்தக்கூடிய சாதனம் இருந்திருக்கிறது.
அதை ஹேமந்திரா தன் வீட்டில் பொறுத்தி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறி இருக்கிறது. இந்த விபத்தில் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து சுவரும் தரைமட்டமாகி இருக்கிறது. ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் ஹேமந்திரா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஹேமந்த்ராவின் மூத்த சகோதரர் ராஜ்குமார் என்கிற முப்பது வயது வாலிபரும், ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹேமந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹேமந்த்ராவின் மூத்த சகோதரர் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். மணமக்களுக்கு வழங்கப்பட்ட கல்யாணப்பரிசு வெடித்து சிதறி புது மாப்பிள்ளையும், அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்த சம்பவம் கபீர்தம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.