புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9வயது சிறுமி கடந்த 2ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர் சிறுமியின் உடலை துணியில் சுற்றி அதே பகுதியில்உ ள்ள சாக்கடையில் குற்றவாளிகள் வீசினர். கஞ்சா போதையில் இந்த செயலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கருணாஸ்(19), விவேகானந்தனம்(57) ஆகியோரை முத்தி்யால்பேட்டை போலீசார் கைது செய்து போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை ஆகியோருக்கு எதிராக மக்கள் கோஷமிட்டனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாய புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என புதுச்சேரி வழக்கறிஞர்கள்
சங்கம் முடிவு செய்தது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி, சிறுமியின் தந்தையை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.20 லட்சம் அறிவித்தார்.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து நேற்று மாலை உடலை பெற்றுக்கொண்டனர். இன்று தான் சிறுமியின் உடல் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது.இந்த நிலையில் இன்று காலை துணை நிலை ஆளுநர் தமிழிசை, டிஜிபி சீனிவாசன், மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து சிறுமி கொலை சம்பவம் குறித்து விசாரித்தார்.
போலீஸ் தாமதமாக விசாரணை நடத்தியதாக மக்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் அளிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு டிஜிபி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிள் முதல் அதிகாரி வரை அனைவரையும் கூண்டோடு மாற்ற முதல்வர் உத்தரவிட்டார்.
அத்துடன் சிறுமி கொலை வழக்கில் தனி கோர்ட் அமைத்து குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வாங்கித்தரப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சிறுமியின் உடல் வீட்டில் இருந்து இறுதிச்சடங்குக்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்தில், மாணவி பயன்படுத்திய புத்தகப்பை, புத்தகம், பொம்மை , துணிமணிகள் உள்ளிட்டவை மாணவி உடலை சுமந்து சென்ற வாகனத்தில் தொங்கவிடப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் போதை பொருள் நடமாட்டம் மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டபடி சென்றனர். 500 மீட்டர் தொலைவில் உள்ள பாப்பம்மாள் சுடுகாட்டில் உடல் இறுதிச்சடங்கு நடக்கிறது. மாணவி படித்த பள்ளியிலும் இன்று துக்கம் கடைபிடிக்கப்பட்டது. மாணவியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.