நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் அவருடன் மோகன்லால், தமன்னா, சிபிராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது.
இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ‘ஜெயிலர்’ பட பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்திலும் ரஜினி நடித்திருந்தார். அதன் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சில நாட்களில் சென்னை திரும்பினார். இந்நிலையில் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினி இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பயணத்தை தவிர்த்து வந்தார். பின்னர் 2018-ம் ஆண்டு வெளியான காலா, 2.0 ஆகிய படப்பிடிப்புக்கு பின்பு இமயமலை சென்ற ரஜினி கடந்த 2 ஆண்டுகளாக அங்கு செல்லவில்லை. தற்போது மீண்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இமயமலை செல்கிறார். அங்கு 1 வாரம் தங்கியிருந்து பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். அதற்கு முன்பு ‘ஜெயிலர்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து விட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக அவர் யாத்திரை மேற்கொள்கிறார் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.