Skip to content
Home » எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பி.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராஜலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் முன்கூட்டியே வந்ததால் பகல் 2.45 மணிக்கு விழா தொடங்கிவிட்டது. அப்போது 2.50 அங்கு வந்த எம்பி நவாஸ்கனி, நான் வருவதற்கு முன்பே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஏன் விழாவை தொடங்கினீர்கள் என அமைச்சரிடம் கேட்டார். அதற்கு, எம்பி முன்கூட்டியே விழாவிற்கு வர வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  எம்பியை, கலெக்டர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அந்நேரம் அங்குகூடிய இருதரப்பைச் சேர்ந்த தொண்டர்களில் சிலர் கலெக்டரை கீழே தள்ளிவிட்டனர். கீழே விழுந்த அவரை தனி பாதுகாப்பு போலீஸாரும், அருகில் இருந்தவர்களும் தூக்கிவிட்டனர். இருதரப்பு தொண்டர்களுக்கு இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் எம்பி நவாஸ்கனி வெளியேறிச் சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!