பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் நியாயவிலைக்கடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் இன்று (03.08.2023) தொடங்கிவைத்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் 500 நியாயவிலை அங்காடிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள இரூர், நாரணமங்கலம், பாடாலூர் ஆகிய இடங்களிலும், அம்மாபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய இடங்களிலும், குரும்பலூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள குரும்பலூர் 1,2 மற்றும் 3, ஈச்சம்பட்டி ஆகிய 10
நியாய விலைக்கடை அங்காடிகளில் ஒரு கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதனடிப்படையில், இரூர் நியாய விலைக்கடையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். இன்று ஒரு நாளில் மேற்காணும் 10 நியாயவிலைக்கடை அங்காடிகளிலும் 600 கிலோ தக்காளி பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவரம்பன், பூங்குழலி மற்றும் பலர் உடனிருந்தனர்.